மட்டக்களப்பில் இடம்பெற்ற போராட்டம்.!
இலங்கையின் வடக்கு, கிழக்கில் அரச தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்ற மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார் .
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (14) காலை இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நீண்ட காலமாக மட்டக்களப்பு மக்கள், மயிலத்தமடு மாதவனை மக்கள் தங்களுடைய மேய்ச்சல் தரைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கடந்த வெள்ளிக்கிழமை மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது.
அதே போல, வலிவடக்கு யாழ்ப்பாணத்திலும் தங்களுடைய காணிக்காக போராடிக் கொண்டிருக்கின்ற மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்பட்டது.
அதேபோல, முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த காணிக்காக அவர்களுடைய போராட்டத்தினுடைய நியாயத்தன்மைக்கும், அவர்களுடைய நீதியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆகவே, இந்த போராட்டமானது தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்ற எங்களுடைய மட்டக்களப்பு மக்களாக இருக்கலாம், மயிலத்தமடு மாதவனை மக்களாக இருக்கலாம், வலிவடக்கு யாழ்ப்பாண மக்களாக இருக்கலாம், முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களாக இருக்கலாம்.
இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக காணி இழந்த மக்கள் தங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.
இலங்கையின் வடக்கு, கிழக்கில் அரச தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்ற மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிந்தார்.
இதற்கு மெசிடோ (MESDO) நிறுவனம் அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.





