புரவுன்லோ தோட்ட முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்; பரிபாலன சபையினர் ஊடக சந்திப்பு.!
புரவுன்லோ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா 30.08.2026 இல் மிக விமர்சையாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு, ஆலய பரிபாலன சபையினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான விசேட ஊடக சந்திப்பு நேற்று 13 ஆம் திகதி ஆலய வளாகத்தில் உள்ள புரவுன்லோ தோட்ட கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
முக்கிய அம்சங்கள் & திட்டமிடல்கள்
கும்பாபிஷேகத் தயார்படுத்தல்கள், ஆலயத்தின் திருப்பணிகள் மற்றும் புனரமைப்பு வேலைகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் மற்றும் கிரியை நிகழ்வுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
பக்தர்களுக்கான வசதிகள், பெருவிழா நாட்களில் வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி குடிநீர், பாதுகாப்பு, வாகன நிறுத்துமிடம் மற்றும் அன்னதான வசதிகள் மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளதாக பரிபாலன சபை தலைவர் மற்றும் செயலாளர் பொருளாளர் அடங்களாக நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஊடகங்களின் பங்களிப்பு ஆன்மீகச் சிறப்புமிக்க இந்நிகழ்வை உலகெங்கும் உள்ள பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில், செய்திகளை அச்சு ஊடகம் மற்றும் நேரலை ஒளிபரப்புகளையும் துல்லியமாக மக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பை பெற தீர்மானிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் ஆலய குருக்கள் சிவ ஸ்ரீ ச.கனகராஜ் குருக்கள் பரிபாலன சபையின் தலைவர் வேலுசாமி கிருஷ்ணகுமார் அசோக், செயலாளர் ராமலிங்கம் வைத்தியலிங்கம், பொருளாளர் மாரிமுத்து மகேந்திரன் முக்கிய உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட மஸ்கெலியா பிரதேச சபையின் உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


