உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பாதுகாப்புப் படைகள் விஞ்ஞான, தொழில்முறையில் உயர் தரத்தைக் கொண்ட படைகளாக மாற வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
43 பார்வைகள்

பாதுகாப்புப் படைகள் விஞ்ஞான மற்றும் தொழில்முறைத் திறன்களில் உயர் தரத்தைக் கொண்ட படைகளாக உலகளவில் செயற்படும் திறனைக் கொண்டுள்ளன என்றும், அதற்காக அவர்களைத் தயார்படுத்துவதும் தேவையான வசதிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடலில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டிற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு மொத்தம் 530 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதில் 379 பில்லியன் ரூபாய் மீண்டுவரும் செலவினங்களாகவும், 151 பில்லியன் ரூபா மூலதனச் செலவினங்களாகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, ஸ்ரீலங்கா இராணுவம், கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கெடட் அதிகாரிகளுக்காக செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள வளிமண்டலவியல் திணைக்களம், கரையோரப் பாதுகாப்பு திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

கல்வி மற்றும் திறன் அபிவிருத்திக்குத் தேவையான நிறுவன கட்டமைப்பை நிர்மாணித்தல் மற்றும் நிர்மாணத்துறை உள்ளிட்ட தொழிற்துறைகளுக்காக பாதுகாப்பு படையினரின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் அதற்காக விசேட கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பாதுகாப்புப் படைகளுக்குள் உள்ள பொறியியல் சேவைகள், நிர்மாணம் மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்கு மேலதிகமாக, விசேட ஆலோசனை சேவைகளாக அவற்றை விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அரச நிர்மாணப் பணிகளில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் அதிகச் செலவுகளைக் குறைப்பதற்கு முப்படையினரின் பொறியியல் படைகளின் திறமைகளை அதிகபட்சமாகப் பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சுகாதார சேவைகள் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவ அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தற்போது இலங்கை இராணுவத்தின் கீழ் 17 பிரதான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதேபோல், கடற்படையின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு மின்னணு உதிரிபாகங்களை இணைத்தல், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை நிறுவுதல், சூரிய சக்தி கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்திட்டங்களை மூலதனச் சொத்துக்களை கையகப்படுத்தும் திட்டங்களாக மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

இலங்கை விமானப்படையின் கீழ் சுமார் 136 திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதுடன், இயந்திரப் பழுதுபார்ப்பு, வளங்களில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் தற்போதைய உலகளாவிய அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தமையுடன், அதன் முதற்கட்டப் பணிகளை இந்த ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்ய முடியும் என்றும், தங்குமிட வசதிகளை ஒதுக்குவதற்கான இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதற்குத் தேவையான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபா மீண்டுவரும் செலவினங்கள் மற்றும் 103 பில்லியன் ரூபாய் மூலதனச் செலவினங்களின் கீழ் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், அனர்த்த சேவை மையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் மண்சரிவு அபாயத்தைக் குறைக்கும் திட்டங்கள், நவீன டொப்ளர் ரேடார் கட்டமைப்புகள் போன்ற திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ சேவைகள் மற்றும் அனர்த்தங்களை மட்டுப்படுத்தும் திட்டங்களுக்கு 2027ஆம் ஆண்டில் அதிக கவனம் செலுத்தவும், டித்வா அனர்த்த நிலையின் கீழ் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளைப் புனரமைப்பதற்குத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க, ஜனாதிபதியின் பணிக் குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக்க பண்டார, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள், நிதி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

1 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

25 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

55 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0