வீடொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.!
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 5ஆம் குறிச்சிப் பகுதியில் உள்ள வீடொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை வேளையில் குறித்த வீட்டின் ஒரு பகுதி திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதை வீட்டிலிருந்தவர்கள் அவதானித்துள்ளனர். தீ விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அயலவர்களும் இணைந்து கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்தத் தீ விபத்தில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பல மின்சார வீட்டு உபகரணங்கள், கதிரைகள், மேசைகள், மாணவர்களின் அறநெறி பாடசாலை சீருடைகள் என்பன முற்றாகத் தீயில் கருகி நாசமாகியுள்ளன.
அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




