மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது
மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கான தீர்வினை விரைவாக பெற்றுக்கொடுக்கவும் அங்கு நடைபெறும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை தடுத்து நிறுத்தி அவர்களை அங்கிருந்து வெளியேற்றவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில்மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (31) இடம் பெற்றது.
இதன்போது மாவட்டத்தில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அத்திட்டங்கள் நூறு வீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் நிதியொதுக்கீடுகள் குறித்து ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டியுள்ள பாலங்கள் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.குறிப்பாக சிறிய பாலங்கள் முதல் பாரியளவிலான பாலங்கள் புனரமைப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
பட்டிருப்பு பாலம், மண்டூர்–குறுமண்வெளி பாலம், அம்பிளாந்துறை–குருக்கள்மடம் பாலம், சந்திவெளி–திகிலிவெட்டை பாலம், வெல்லாவெளி–திவுலானை வீதி மற்றும் அம்பிளாந்துறை–வில்லுக்குளம் வீதி ஆகிய திட்டங்களுக்கான சாத்தியவள ஆய்வு அறிக்கைகளை விரைவாகத் தயாரித்து, அபிவிருத்திப்பணிகளை முன்னெடுப்பது குறித்து இங்கு வலியுறுத்தப்பட்டது.
உறுகாமம் மீனவர் சங்கம் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் இறங்குதுறை பிரச்சினை தொடர்பில் இதன்போது விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அனைத்து தரப்பினரின் கருத்துகளும் பரிசீலிக்கப்பட்டன. இதன்போது மீனவர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, அனைத்து மீனவர்களும் உறுகாமம் குளத்தில் அமைந்துள்ள இறங்குதுறையில் தங்களது தோணிகளை நிறுத்தி பயன்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விவசாயிகளின் நெல் கொள்வனவு, நெல்லுக்கான உத்தரவாதக் கொள்விலை, விவசாயிகளின் நலன் மற்றும் மாவட்ட மக்களின் நீண்டகால அபிவிருத்தித் தேவைகள் ஆகிய அனைத்தும் விரிவாக ஆராயப்பட்டன.
இவ்விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்கள் இனியும் தாமதமின்றி செயற்பட்டு, மக்களுக்கு நடைமுறைப்படியான தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதன்போது நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு,மாதவனை பிரச்சினை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு வருகைதந்தபோது மகாவலி ஊடாக கால்நடைபண்ணையாளர்களுக்கு காணி ஒதுக்கீடுசெய்வது தொடர்பில் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஆராயப்ப்பட்டதுடன் தற்போது மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது குறித்து இங்கு பண்ணையாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது அவ்வாறான அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை ஒரு குறித்த காலப்பகுதிக்குள் அங்கிருந்து வெளியேற்றி கால்நடை பண்ணையாளர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைககள் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக வனஇலாகாவினர் இந்த விடயங்களில் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் பட்டிப்பளை,மயிலத்தமடு போன்ற பகுதிகளில் காடுகளை வெட்டி அத்துமீறிய பயிர்ச்செய்ககைளை முன்னெடுக்கும்போது அது தொடர்பில் நடவடிக்கையெடுப்பது இல்லையெனவும் சாதாரண நபர்கள் இவ்வாறு செய்தால் வழக்குகளை தாக்கல்செய்வதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞானமுத்து சிறிநேசன்,இளையதம்பதி சிறிநாத், கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந், பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வீ.நவநீதன், ரீ நிர்மலராஜ், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.












