விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்; அப்பகுதியில் பரபரப்பு.!
கிளிநொச்சி, அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது அங்கிருந்த சிலர் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நால்வர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், காட்டை அழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.