மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலைக்கு முன்பாக போராட்டம்.!
மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இன்றைய தினம் புதன்கிழமை (22) காலை பாடசாலைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஈடுபட்டனர்.
குறித்த அதிபர் தொடர்பாகவும் அவரை உடனடியாக மாற்றக் கோரி ஏற்கனவே போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் வருகை தந்த மன்னார் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாக கூறிய போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லை எனவும், பல மாதங்கள் கடந்தும் அதிகாரிகள் குறித்த பாடசாலை விடயத்தில் அசமந்த போக்குடன் செயல்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே துரித கதியில் குறித்த பாடசாலையில் உள்ள தற்போதைய அதிபரை மாற்றி நிர்வாகத்திறன் உள்ள ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதோடு தற்போது பல மாணவர்கள் குறித்த பாடசாலையில் இருந்து இடை விலகி பிறிதொரு பாடசாலைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த அதிபரை உடன் மாற்றி புதிய அதிபரை நியமிக்க மன்னார் வலயக்கல்வி திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்காது விட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர்.
இறுதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் வலயக்கல்வி திணைக்களத்திற்கு ஊர்வலமாக சென்று தமது கோரிக்கையை அதிகாரிகளிடம் முன் வைத்தனர்.






