உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட மலர்ச் செடிகள்; பெண் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
82 பார்வைகள்

தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து சட்டவிரோதமாக நாட்டுக்குக் கடத்திவரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுடன் இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL 403 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்ற அவரை, விமான நிலைய சுங்க அதிகாரிகளும் சுங்கப் பிரிவின் பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அப்போது, அவரது பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான மலர்ச் செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

1993 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, தாவரங்களையோ அல்லது அவற்றின் பகுதிகளையோ இலங்கைக்குள் இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களம் வழங்கிய செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

மேலும், ஏற்றுமதி செய்யும் நாட்டினால் வழங்கப்படும், பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகள் அற்றவை என்பதை உறுதிப்படுத்தும் தாவர தனிமைப்படுத்தல் சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறி தாவரங்களை இறக்குமதி செய்வது சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானதும் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடத்தி வரப்பட்ட அனைத்து மலர்ச் செடிகளும் அரசுடைமையாக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பெண் பயணிக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட அனைத்து மலர்ச் செடிகளும் அடுத்தகட்ட அழிப்பு நடவடிக்கைகளுக்காக விமான நிலைய தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது

மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மறே வட்டாத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் உறுப்பினர் இரண்டு முன் மொழிவுகளை முன் வைத்து பேசினார். இன்று 16 ம் திகதி…

48 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றில் ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும்

ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும் – 2026 எனும் நிகழ்வு அக்கரைப்பற்று மஹ்ழறதுல் காதிரிய்யா பள்ளிவாசல் நூறுல் இர்பான் அறபுக்கல்லூரி வளாக…

39 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆதரவு தினத்தினை முன்னிட்டு கல்முனையில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தினால், சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினத்தினை ஒட்டி விசேட விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று கல்முனையில் உள்ள தனியார்…

45 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி அமைச்சின் CResMPA திட்டத்தின் கீழ், உலக வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் புதிய…

49 0 0