உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நாடு முழுவதிலும் 56,422 டெங்கு தொற்றாளர்கள் பதிவு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
46 பார்வைகள்

இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் அவசர நடவடிக்கைகள் குறித்து தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தற்காலிக பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிவிப்பின்படி, இவ்வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் இருந்து 56 ஆயிரத்து 422 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன் டெங்கு தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளதுடன், கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 21 ஆயிரத்து 556 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 1,025 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.47 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள்ளும் இதன் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக தென் மாகாணத்தில் 15 வீதமும், சப்ரகமுவ மாகாணத்தில் 8.76 வீதமும் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வாறு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், வைத்தியசாலைகளின் பொது வார்டுகள் மற்றும் சிறுவர் வார்டுகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இது ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்புக்கும், வைத்தியசாலை ஊழியர்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளதுடன், பிற நோய்களுக்காகச் சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் மருத்துவச் சேவைகளிலும் இதனால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த ஜூன் மாதத்தில் பல கட்டங்களாக விசேட டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு அரச நிர்வாகம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கள், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம், முப்படையினர் மற்றும் பொலிஸார் எனப் பல தரப்பினர் தமது முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஜூலை 2, 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் மீண்டும் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் புகை விசிறல் முறையானது, பறக்கும் நிலையில் உள்ள முதிய நுளம்புகளை மாத்திரமே அழிக்கும் என்பதால் அது மட்டுமே போதுமானதல்ல என்றும் வைத்தியர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார்.

நுளம்புகளின் வாழ்க்கை வட்டத்தின் பெரும் பகுதி தண்ணீரிலேயே கழிவதால், முட்டை மற்றும் கூட்டுப்புழுக்கள் உள்ள நீர்நிலைகளை அழிப்பது கட்டாயமாகும். எனவே, புகை விசிறல் மற்றும் நீர்நிலைகளை அழித்தல் ஆகிய இரண்டு நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் செய்யப்பட வேண்டும்.

மேலும், டெங்கு பரவலின் ஆரம்பக் காலகட்டத்தில் பாடசாலை வளாகங்களிலேயே அதிகளவான நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டதால், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டு, பாடசாலை சுகாதாரக் குழுக்கள் மூலம் தூய்மைப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

டெங்கு ஒழிப்பை நீண்ட கால அடிப்படையில் கிராம உத்தியோகத்தர் மட்டத்திலிருந்து பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து முன்னெடுப்பதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சின் செயலாளர் விரைவில் வெளியிடவுள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.

அத்துடன், டெங்கு ஒழிப்புக்காக வழமையான பௌதிக முறைகளுக்கு மேலதிகமாக, உயிரியல் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது. இவ்வருட இறுதிக்குள் வெளிநாட்டு நிறுவனமொன்றின் ஒத்துழைப்புடனும், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடனும் இணைந்து இந்த உயர் தொழில்நுட்ப முறையை இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஒரு சில வீடுகளில் டெங்கு நோயாளர்கள் இருந்தும், மீண்டும் அங்கு பரிசோதிக்கும் போது நுளம்பு பெருகும் இடங்கள் காணப்படுகின்றமை பொதுமக்களின் பெரும் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாகவும் வைத்தியர் கவலை வெளியிட்டுள்ளார்.

மழைக்காலம் இல்லாவிட்டாலும் கூட, நுளம்புகள் இடும் முட்டைகள் நீர்நிலைகளின் சுவர்களில் ஒட்டியிருந்து, சிறியளவு நீர் கிடைத்தாலும் மீண்டும் பெருகும் தன்மையுடையவை. எனவே, பொது இடங்கள் மற்றும் வீடுகளில் குப்பைகள் சேருவதைத் தவிர்த்து, நீர் தேங்கும் இடங்களை முறையாக அகற்றி, இந்த அபாயகரமான நோயிலிருந்து உயிர்களைப் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் சுகாதாரத் துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

35 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

43 0 0