மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமுக்கு காரைதீவில் அஞ்சலி.!
அம்பாறை மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீமின் மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை காரைதீவில் நடைபெற்றது.
அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலம் ஊடகத் துறையில் இன, மத பேதமின்றி சமூக சேவையில் ஈடுபட்ட அவரின் பணிகளை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மறைந்த ஊடகவியலாளருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் பல சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.