குடிநீர் தகராறில் மோதல் – மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.!
ஹட்டன், ருவன்புர பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குடிநீர் விநியோகம் தொடர்பான தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ருவன்புர பகுதியில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கடந்த 24ஆம் திகதி முதல் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதங்கள் இடம்பெற்று வந்துள்ளன.
பின்னர் நிலைமை தீவிரமடைந்து இரு குழுக்களும் மோதிக்கொண்டதில் ஆறு பேர் காயமடைந்தனர்.காயமடைந்த 39 வயதுடைய நபர் கண்டி போதனா வைத்தியசாலையின்தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் ருவன்புர பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
மோதலில் காயமடைந்த ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவரின் சகோதரரும் காயமடைந்தவர்களில் ஒருவராவார் என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.