பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நீக்க கோரி மன்னாரில் கையொப்ப சேகரிப்பு.!
மன்னார் பஜார் பகுதியில், பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தை நீக்கக் கோரி இன்று (28) சனிக்கிழமை மதியம் கையொப்ப சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்றது.மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு, அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கையொப்ப சேகரிப்பைத் தொடர்ந்து ஊடகச் சந்திப்பும் நடைபெற்றது. அதில் ஜாட்சன் பிகிராடோவும் சட்டத்தரணி செல்வராசா டினேசன் அவர்களும் கருத்துத் தெரிவித்தனர்.
நாட்டில் பயங்கரவாதச் சூழல் நிலவாத நிலையில் இத்தகைய சட்டம் தேவையற்றது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய, மக்களை ஒடுக்கக்கூடிய சட்ட முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.இச்சட்டமூலத்தை எதிர்த்து தொடர்ச்சியான ஜனநாயக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
