கல்முனை பிரதான வீதியில் விபத்து – உழவு இயந்திர சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.!
கல்முனை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில், உழவு இயந்திரம் ஒன்றின் மீது பாரவூர்தி ஏறிய நிலையில், உழவு இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபைக்குச் சொந்தமான பாரவூர்தி ஒன்று களுவாஞ்சிகுடி பகுதியில் பழுதடைந்த நிலையில் நின்றிருந்தது. குறித்த வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக, உழவு இயந்திரத்தின் உதவியுடன் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பின்னால் இழுத்துச் செல்லப்பட்ட பாரவூர்தி எதிர்பாராத விதமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற உழவு இயந்திரத்தின் மீது ஏறியுள்ளது.
அபாயத்தை உணர்ந்த உழவு இயந்திர சாரதி சாமர்த்தியமாக கீழிறங்கி தப்பியதால், அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. எனினும், விபத்தினால் உழவு இயந்திரம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாகனங்களை இழுத்துச் செல்லும் போது தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதும் ஆராயப்பட்டு வருகிறது.
