மாற்றுத் தீர்வு வரை மாகாண சபைகள் நீக்கமில்லை – ரில்வின் சில்வா தெரிவிப்பு.!
இனப்பிரச்சினைக்கு நிலையான மாற்றுத் தீர்வொன்றை கண்டுபிடிக்கும் வரை மாகாண சபை முறைமை நீக்கப்படமாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
இனப்பிரச்சினைக்கான சரியான தீர்வை உருவாக்குவது தொடர்பாக தங்களது தேர்தல் அறிக்கையிலேயே உறுதியளித்திருந்ததாகவும், மாகாண சபைகள் அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பது தங்களது நிலைப்பாடாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், சிறந்த மாற்றுத் தீர்வை எட்டாமல் மாகாண சபைகளை அகற்றப்போவதில்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சிக் காலத்தில் உருவான சட்டச் சிக்கல் காரணமாகவே தற்போது மாகாண சபைகளை இயங்கச் செய்ய முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்தார். இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்த போதிலும், ‘டித்வா’ புயல் அனர்த்தத்தால் அது சாத்தியமாகவில்லை என்றும் கூறினார்.
மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், தேர்தலை நடத்துவதற்கு தடையாக உள்ள சட்டச் சிக்கல்கள் நீக்கப்பட வேண்டும் எனவும், எல்லை நிர்ணய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனை விரிவாக ஆய்வு செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.