சுரேஷ் சலே கைது: “பிரிவினைவாதிகளைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கை” – சம்பத் அத்துகோரல தெரிவிப்பு.!
அரசுப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது நடவடிக்கை, பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல தெரிவித்துள்ளார்.கொழும்பில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டறிந்து, பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசு, 16 மாதங்கள் கடந்தும் அதனை நிறைவேற்றத் தவறியுள்ளதாக கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதத்திலேயே பிரதான சூத்திரதாரி வெளிப்படுத்தப்படுவார் என ஜனாதிபதி அறிவித்திருந்ததாகவும், அது நடைமுறைக்கு வராத நிலையில்தற்போது ஏப்ரல் மாதம் நெருங்கும் சூழலில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்தக் கைதின் மூலம் ஜனாதிபதி பிரிவினைவாதிகளையும் கத்தோலிக்க சமூகத்தினரையும் திருப்திப்படுத்த முயற்சிக்கின்றார் என்றும், அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் பிற குற்றச்சாட்டுகளிலிருந்து கவனம் திருப்புவதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சில அதிகாரிகளை பயன்படுத்தியே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது நாட்டின் புலனாய்வுத் துறையை பலவீனப்படுத்த எந்த நாட்டுத் தலைவரும் முயற்சிப்பதில்லை என்றும், ஆனால் தற்போதைய அரசு அரசியல் காரணங்களுக்காக புலனாய்வுத் துறையை பாதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாகவும் சம்பத்அத்துகோரல குற்றஞ்சாட்டினார்.