ஆரோக்கியா திட்டத்திலிருந்து விலக தீர்மானம் – ஹன்சமால் வீரசூரிய தெரிவிப்பு.!
சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி முதல் விலகுவதற்கு மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால் தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், நோயாளர்களுடன் இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனத் தெரிவித்த அவர், பொதுமக்களுக்கு குறைந்தபட்ச பாதிப்பு ஏற்படும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.
இது தொடர்பில் தமது சங்கம் அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட்ட போதிலும், கோரிக்கைகள் குறித்த அரசாங்கத்தின் சாதகமான பதில் இன்மையே வருத்தத்திற்குரியதாகும் எனவும் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய சுட்டிக்காட்டினார்.