முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர்பிரியங்கர ஜயரத்ன எதிராக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.அத்துடன், இவ்வழக்கின் முதலாவது சாட்சியாளர் மார்ச் 24ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு அழைப்பாணை பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கில், 2014ஆம் ஆண்டு மே தினப் பேரணியில் கலந்துகொண்ட ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குமாறு பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் கோரியதன் பேரில், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தை விடுவித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் விளைவித்ததாகக் கூறி, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.