ஜப்பான் பேரரசரின் பிறந்தநாள் வரவேற்பு நிகழ்வு கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.!
ஜப்பான் பேரரசரின் 66 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் ஏற்பாடு செய்த விசேட வரவேற்பு நிகழ்வு நேற்று (25) கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
முன்னாள் ஜனாதிபதிகள், சபாநாயகர், அமைச்சரவை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் இராஜதந்திரப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய ஜப்பான் தூதுவர் இசொமதா, 1964 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 10,000 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று, இறுதிவரை தளராத மனவலிமையுடன் ஓடி முடித்த இலங்கை தடகள வீரர் ரணதுங்க கருணாநந்தாவின் சாதனையை எடுத்துக்காட்டாகக்குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சியையும் முன்னேற்றத்தையும் பாராட்டிய அவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட யென் கடன் உதவித் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாக நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை அரசின் சார்பில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜப்பான் பேரரசருக்கும் ஜப்பான் மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தை நினைவுகூர்ந்த அவர், முதலீடு, கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் இருநாட்டு மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நிகழ்வில் ஜப்பானிய பாரம்பரியக்கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் மலர் அலங்காரம், பாரம்பரிய பொம்மைகள், சாமுராய் தலைக்கவசங்கள் மற்றும் கராத்தே காட்சிகள் இடம்பெற்றன. மேலும், விருந்தினர்களுக்கு ஜப்பானிய பாரம்பரிய உணவுகள் மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன.இலங்கை–ஜப்பான் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இது அமைந்தது.