காணி முரண்பாடினால் நடந்த விபரீதம்!
எல்பிட்டிய, படுவன்ஹேன பொல்கஸ்வத்த பகுதியில் காணி முரண்பாட்டினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது மூத்த சகோதரர் தனது இளைய சகோதரரை கறுவாப் பொல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (26) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு அருகிலேயே இருவரின் வீடுகளும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணியை அளவிடுவதற்காக நில அளவையாளர்கள் வந்து அளவீட்டுப் பணிகளை நிறைவு செய்து சென்றதன் பின்னர், காணி தொடர்பாக இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, உயிரிழந்த நபர் மீது கறுவாப் பொல்லால் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் தரையில் விழுந்துள்ளார்.
பின்னர் குடும்பத்தினர் அவரை உடனடியாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் 73 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைஎல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.