யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு.!
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதியில் வீதியோரத்தில் ஏற்பட்ட யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்தவர் 56 வயதுடைய கித்சிறி விஜேயபிரியந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே. ஏ. நூருல்லா இன்று (26) பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவல்களின் படி, குறித்த நபர் நேற்றிரவு (25) இரவு 10 மணியளவில் எரிபொருள் பெறுவதற்காக உந்துருளியில் சென்றபோது வீதியில் நின்றிருந்த யானை அவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் கடுமையாக காயமடைந்த அவர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக அறியப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.