இரணைதீவில் சட்டவிரோத கடல் அட்டை பிடிப்பு – பத்து பேர் கைது.!
சட்டவிரோதமான முறையில் இரவு வேளையில் சுழியோடி கடல் அட்டைகளை பிடித்த பத்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1,232 கடல் அட்டைகள், மூன்று டிங்கி படகுகள் மற்றும் சுழியோடல் உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கிளிநொச்சி மாவட்டம் இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் இன்று (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கண்டறியப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதிக்கு அப்பால் உள்ள மேற்கு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான மூன்று டிங்கி படகுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, 29 முதல் 54 வயதுக்கு இடைப்பட்ட மன்னார் பள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள்கடல் அட்டைகள், டிங்கி படகுகள் மற்றும் சுழியோடல் உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என கடற்படை தெரிவித்துள்ளது.