இருபது அடி பள்ளத்தில் பாய்ந்த பாரவூர்தி; இருவர் படுகாயம்.!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை சிங்கள மகா வித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டனிலிருந்து தங்கொட்டுவ நோக்கி அதிவேகமாகப் பயணித்த பாரவூர்தி ஒன்று, வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து புரண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
எதிரே வந்த மற்றொரு பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தவிர்க்க முயன்ற போதே, தனது பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்தது என்று விபத்துக்குள்ளான பாரவூர்தியின் சாரதி தெரிவித்துள்ளார்.
பாரவூர்தியின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சாரதியை வட்டவளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடும் போராட்டத்துக்கு மத்தியில் மீட்டுள்ளனர்.
படுகாயமடைந்த சாரதியும் உதவியாளரும் முதலில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பாரவூர்தி விபத்துக்குள்ளான இடத்தில் மற்றுமொரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று இவ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
அதில் பயணித்த பயணி ஒருவர், பாரவூர்தி விபத்தை வேடிக்கை பார்ப்பதற்காக கீழே இறங்கியுள்ளார். பின்னர் மீண்டும் பேருந்தில் ஏற முயன்றபோது, பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி அவரது கால் நசுங்கியுள்ளது. படுகாயமடைந்த அவரும் சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன கமகே தலைமையிலான போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் இவ்விரு விபத்துக்கள் குறித்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.