இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய இராணுவத் தளபதி!
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மூன்று நாட்கள் பயணமாக ஜனவரி 7ஆம் திகதி இலங்கை வருகின்றார்.இலங்கை இராணுவத்தினரால் மரியாதை அணிவகுப்புடன் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்படவுள்ளது.இந்திய இராணுவத் தளபதியுடன் மேலும் சில உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பு வரவுள்ளனர்.
எதிர்வரும் வியாழக்கிழமை வரை அவர்கள் நாட்டில் தங்கி இருப்பார்கள். இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருடன் இந்திய இராணுவத் தளபதி பேச்சு நடத்துவார் எனத் தெரியவருகின்றது.அதேவேளை, ஜெனரல் உபேந்திர திவேதி, புத்தலவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் உரை நிகழ்த்தவுள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர்.அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அண்மையில் இலங்கை வந்து சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.