வரலாறு படைத்த ஈட்டி எறிதல் சாம்பியன் ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்.!
உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப் (World Athletics Ultimate Championship) மற்றும் டைமண்ட் லீக் (Diamond League) ஆகிய இரண்டு பட்டங்களையும் வென்ற இலங்கையின் ஈட்டி எறிதல் சாம்பியன் ருமேஷ் தரங்க இன்று (15) அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TK-730 என்ற விமானம் மூலம் அதிகாலை 5.10 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ருமேஷ் தரங்கவை வரவேற்பதற்காக அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை தந்திருந்தனர்.
மேலும், விளையாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் அவர் பணியாற்றும் இலங்கை விமானப்படையின் உயர் அதிகாரிகளும் ருமேஷ் தரங்கவை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில், 91.09 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற ருமேஷ் தரங்க சமர்த்தானார்.
அங்கு இரண்டாம் இடத்தைப் பெற்ற கிரெனடா நாட்டின் வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸை விட 4.91 மீட்டர் கூடுதல் இடைவெளியைப் பதிவு செய்து அவர் இந்த வெற்றியை உறுதிப்படுத்தினார்.
ஜெர்மனியின் ஜூலியன் வெபர் மற்றும் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் போன்ற உலகின் முன்னணி வீரர்களை அவர் தோற்கடித்தமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதனிடையே, அல்டிமேட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கு முன்னர் டைமண்ட் லீக் பட்டத்தையும் ருமேஷ் தரங்க கைப்பற்றியிருந்ததால், சர்வதேச தடகள அரங்கில் இலங்கைக்கு பெரும் கௌரவம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





