ராஜபக்ஷக்களின் அரசியலுக்கு மக்கள் இனி இடமளிக்கமாட்டார்கள்.!
இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ கிடையாது என்றும், அவர்களின் குடும்ப அரசியலுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும் இனி இடமளிக்கமாட்டார்கள் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாமல் ராஜபக்ஷ சிறைக்கு சென்றமையால் ஆதரவு இரட்டிப்பாகும் என்பது அடிப்படையற்ற கதையாகும். எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதிக்கு முன்னர் தான் கைது செய்யப்படக்கூடும் என நாமல் ராஜபக்ஷ தொடர்ச்சியாகக் கூறி வந்தமை, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட தமக்கு என்ன நேரும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் என்பதால்தான். எனினும், தனது கைதுக்கான உண்மையான காரணத்தை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்த மறுக்கின்றார்.
ராஜபக்ஷக்கள் தங்களது குற்றங்களை மறைக்கவே மீண்டும் மக்கள் கூட்டங்களை நடத்த முயல்கின்றனர். குறிப்பாக, ‘ஏயார்பஸ்’ விமானக் கொள்வனவு ஒப்பந்த ஊழல் என்பது இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட குற்றச்சாட்டு அல்ல; மாறாக, லண்டன் மேல் நீதிமன்றத்தில் எயார்பஸ் நிறுவனத்துக்கு எதிராகத் தொடரப்பட்டு நிரூபிக்கப்பட்ட வழக்காகும். உலகளவில் பலருக்கு அந்நிறுவனம் இலஞ்சம் கொடுத்துள்ளமை நீதிமன்றத்தில் உறுதியான நிலையில், அதன் நேரடித் தொடர்புகள் ராஜபக்ஷ குடும்பத்தினரை நோக்கியே வந்துள்ளன.
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் அரசியல்வாதிகள் ஆதரவாளர்களைப் பயன்படுத்தித் தங்களைக் காப்பாற்ற முயல்வது வழக்கமான ஒன்றுதான். அதேபோல் சமூகக் கருத்தை உருவாக்க அவர்கள் முயன்றாலும், இதுபோன்ற அரசியல் நாடகங்களுக்கும் மேடைப் பேச்சுக்களுக்கும் கட்டுப்பட்டு இலங்கையின் சுயாதீன நீதிமன்றங்கள் தமது தீர்ப்புகளையோ சட்ட நடவடிக்கைகளையோ ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
எனவே, செப்டெம்பர் 12ஆம் திகதியோ அல்லது அதற்குப் பின்னரோ அவர்கள் எங்கு கூட்டங்களை நடத்தினாலும் அரசுக்கோ சட்ட நடவடிக்கைக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது.” – என்றார்.