சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை.!
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 1,104 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதில் 978.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுகளும், காணிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சட்டவிரோத வழிகளில் சம்பாதிக்கப்பட்ட 109 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்களும் 14 மில்லியன் ரூபாய் பணமும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச பொலிஸாரின் ‘சிவப்பு எச்சரிக்கை’ பிறப்பிக்கப்பட்ட 43 குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்படாத 38 குற்றவாளிகளும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட 95 பேர் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
‘1818’ என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாகப் பல குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்து வருகின்றன.
இந்தத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இதுவரை 7,071 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 9,105 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.