எரிபொருள் ஆய்வுக்காக மன்னாரைச் சுற்றித் துளையிடுவது தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் அறிக்கை
இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து தனது கவனத்தைச் செலுத்தி உள்ளது.
குறித்த விடயங்கள் குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை இன்று (10) வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம், 2026 ஆகஸ்ட் 18 முதல் 20 வரை நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது, நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து தனது கவனத்தைச் செலுத்தி உள்ளது.
சமூகத்தில் சமத்துவத்தையும் நீதியையும் ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் அண்மையில் எடுத்த சில நடவடிக்கைகளை ஆயர்கள் பாராட்டியுள்ளனர். இத்தகைய முயற்சிகளில், மன்னாரில் முன்மொழியப்பட்ட காற்று மின் நிலையங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
14 காற்றாலை கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் வாக்குறுதி அளித்தபடி, இதுபோன்ற மின் நிலையங்களை மேலும் விரிவாக்கம் செய்யக்கூடாது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக அரசாங்கத்திற்கு இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தக் கோரிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் இலங்கையின் மேன்மை தங்கிய அதிபர் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது.
இது ஒரு நீண்ட கால தேவையாக இருந்ததுடன், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பெரிதும் பங்கு வகிக்கும் சமூகத்தின் இந்தப் பிரிவுக்கான சம்பள உயர்வை இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் பாராட்டுகிறது.
அதே வேளையில், யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள் குறித்த பிரச்சினை தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஏற்கனவே நீண்டு கொண்டே செல்லும் செம்மணி அகழ்வாராய்ச்சிகள் நிறைவு செய்யப்பட வேண்டும். செம்மணியுடன் தொடர்புடையதாக கூறப்படும் குற்றங்களுக்கான உண்மையையும் பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்த இந்த முயற்சி தேவைப்படுகிறது.
அதேபோல், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரின் போது நடந்த பயங்கரவாதம் மற்றும் பெருந்திரளான கொலைகள் தொடர்பான பிற சம்பவங்களும், இந்தக் காலகட்டத்திற்கு முந்தைய காலத்தில் அனுபவித்த பயங்கரவாதச் செயல்களும் உள்ளன.
மன்னார் தீவில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் பாரிய சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்துவது குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் கவலை கொண்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்கும் இந்த நடவடிக்கையால் மக்கள் நிம்மதி இழந்துள்ள நிலையில், எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் துளையிடுவது பற்றிய தகவல்களும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்திற்கு கிடைத்துள்ளன.
இவை பொருளாதார வளர்ச்சியை நோக்கிய நேர்மறையான முயற்சிகளாக இருக்கலாம். இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை வெளிப்படையான முறையில் நடத்துவதும், இதுபோன்ற திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்துவதும் பொறுப்புள்ளவர்களின் கடமையாகும்.
இதுபோன்ற எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைக்கும் முன்னர் உள்ளூர் பொது மக்களின் கருத்தை கண்டறிவதற்கான முறையான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். மன்னார் தீவில் உள்ள மீனவ சமூகத்தின் வாழ்வாதாரமும் நீர் வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகளால் அவை பாதிக்கப்படக்கூடாது, இதன் மூலம் மக்களின் உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்படும்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் (Express Pearl) கப்பலினால் ஏற்பட்ட விரிவான சுற்றுச்சூழல் சேதம் குறித்தும், விதிக்கப்பட்ட இழப்பீட்டை கோருவதற்கு நீதிமன்றத்தின் தீர்மானத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் கவலை கொண்டுள்ளது.
மேலும், முத்துராஜவெல சதுப்பு நிலத்தை நிரப்புவதன் மூலம் தற்போதைய நில மீட்பு நடவடிக்கைகளால் ஏற்படும் அபாயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.
மேலும் அபாயகரமான அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிராக முத்துராஜவெல சதுப்பு நிலத்தை பாதுகாப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் குருநாகல் ஆயர் கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேரா ஆண்டகை ,இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் பொதுச் செயலாளர் யாழ்ப்பாண ஆயர் . கலாநிதி P. அந்தோனி ரஞ்சித் ஆண்டகை, கொழும்பு பேராயர் அதிமேதகு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ,திருகோணமலை ஆயர் கலாநிதி நோயல் இமானுவேல் ஆண்டகை , கண்டி ஆயர் கலாநிதி வலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை , காலி ஆயர் கலாநிதி ரெய்மண்ட் விக்கிரமசிங்க ஆண்டகை , பதுளை ஆயர் கலாநிதி ஜூட் நிஷாந்த சில்வா ஆண்டகை, சிலாபம் ஆயர் கலாநிதி விமல் சிறி ஜெயசூரிய ஆண்டகை ,இரத்தினபுரி ஆயர் . கலாநிதி அந்தோனி வைமன் குரூஸ் ஆண்டகை, மன்னார் ஆயர் அதிவண. கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, அனுராதபுரம் ஆயர். கலாநிதி சகாய ஜெயமான்ன ஆண்டகை , கொழும்பு துணை ஆயர் கலாநிதி மெக்ஸ்வெல் G. சில்வா ஆண்டகை , கொழும்பு துணை ஆயர் கலாநிதி J. D. அந்தோனி ஜெயக்கொடி ஆண்டகை ஆகியோர் கையொப்படமிட்டுள்ளனர்.


