தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் சிலோன் மீடியா போரம் உயர்மட்டக் கலந்துரையாடல்
“இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” (Sri Lanka Journalists’ Trust Fund) ஸ்தாபிப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று (10) வியாழக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் தகவல் தொழில்நுட்ப மையத்தில் இடம்பெற்றது.
வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையிலான ஊடகக் குழுவினரும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், ஸ்தாபிக்கப்படவுள்ள நிதியத்தின் நோக்கங்கள், செயற்பாடுகள், நிதி மூலோபாயம் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால் விரிவான கணினித் திரைக் காட்சி (Presentation) மூலம் விளக்கமளித்தார்.
இக்கலந்துரையாடலில் பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால் மற்றும் கலாநிதி எம்.ஐ.எம். றியாத் ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
சிலோன் மீடியா போரத்தின் சார்பில் அதன் செயலாளர் நூருல் ஹுதா உமர், உப தலைவர் எஸ். தஸ்தகீர், அமைப்பாளர் எம்.வை. அமீர், உப செயலாளர் என்.எம். அப்றாஸ், செயற்குழு உறுப்பினர்களான எஸ். ஜனூஸ், என்.எம். சிறாஜுதீன், ஏ.வி.எம். ராஜித், மற்றும் ஜே.எம். வாசித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், “ஸ்தாபிக்கப்படவுள்ள ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியமானது நாட்டின் அனைத்து இன ஊடகவியலாளர்களின் நலன்களையும் உள்ளடக்கியது. எனவே, அனைத்து ஊடகவியலாளர்களும் ஒன்றிணைந்து இத்திட்டத்திற்கு தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.








