பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் – சத்தியலிங்கம் எம்பி வலியுறுத்தல்!
மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசு நீக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்குவிதிகள் தொடர்பான பரிசீலனை விவாதத்தில் இன்றைய தினம் (08.09.2026) கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று பாராளுமன்றத்தில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்குவிதிகள் பரிசீலிக்கப்படுகின்றன.
இந்த இரண்டு ஒழுங்குவிதிகள் தொடர்பாகவும் எனது வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன்.
மிகவும் நல்ல விடயங்கள் இந்த ஒழுங்குவிதிகளில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
இலங்கையில் சராசரியாக ஒரு வருடத்துக்கு 8,000 தொடக்கம் 10,000 வீதி விபத்துகள் நடைபெறுவதாகவும் 2,500 ற்கு மேற்பட்ட இறப்புகள் ஏற்படுவதாகவும் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இலங்கையிலே ஏற்படுகின்ற மொத்த இறப்புகளில் 2 வீதமானதாகும் என புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
வீதி விபத்துக்களால் ஏற்படும் இறப்புகளில் 40 தொடக்கம் 45 வீதமானவர்கள் சிறுவர்களும் முதியோர்களுமாக இருக்கிறார்கள். மிகுதி 55 வீதமானவர்கள் நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய உழைக்கும் வர்க்கத்தினராவர்.
எனவே நாட்டினுடைய பொருளாதாரத்திலே வீதி விபத்துகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வீதி விபத்துகளில் பாதசாரிகளும் இருசக்கர வாகனங்களிலே பயணிப்பவர்களும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். பாதசாரிகள் கிட்டத்தட்ட 27 வீதமும், இருசக்கர வாகனத்தை பயன்படுத்துபவர்கள் 43 வீதமாகவும் உள்ளனர். அதாவது 70வீதமானவர்கள் நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வயதினராவர்.
விபத்துகளால் ஏற்பட்டுவரும் இறப்புகள் மற்றும் மிகவும் பாரதூரமான காயங்களுக்கு உட்பட்டவர்களினுடைய வைத்தியச் செலவுக்காக 2021ஆம் ஆண்டு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் 3.1 வீதமாகும். ஆனால் அதே ஆண்டின் சுகாதாரச் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியானது மொத்த தேசிய உற்பத்தியின் 4.1 வீதமாகும்.
ஆகவே நாட்டின் பொருளாதாரத்தின் பெரும் பகுதி வீதி விபத்துடன் தொடர்புடைய விடயங்களுக்காக செலவாகின்றது.
வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எமது நாட்டிலே பொது போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருப்பது அல்லது பொதுப் போக்குவரத்து வசதிகள் மக்களுடைய போக்கு வரத்து தேவையை ஈடுசெய்ய முடியாமல் இருப்பதே முக்கியமாக காரணமாக இருக்கிறது.
2022ஆம் ஆண்டு தரவுகளின்படி, கிட்டத்தட்ட 1,000 பேருக்கு 400 வாகனங்கள் இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது.
ஆகவே, பொதுப் போக்குவரத்தை செம்மையாக்குவதன் மூலமாக வீதியில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடியதாக இருக்கும் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்வருடம் முதல் எட்டு மாதங்களில் இதுவரை 1,600 இறப்புகள் வீதிவிபத்துக்களால் ஏற்பட்டிருக்கின்றது. இவ் எண்ணிக்கை டெங்கு நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 30 வீதம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆகவே, இந்த விடயங்களை உன்னிப்பாக அவதானித்து, சட்டத்திருத்தங்களை செய்வது மிகவும் அவசியமான ஒரு தேவையாக இருக்கிறது.
ஆசனப்பட்டி அணிவது சட்டத்திருத்தத்தினூடாக ஏற்கனவே கட்டாயமாக்கப்படுள்ளது. இருந்தபோதும் வாகன உரிமையாளர்கள் தம்மை தயார்ப்படுத்துவதற்காக கால அவகாசம் வளங்கப்பட்டிருந்தாலும் இம்மாதம் 19ஆம் திகதியுடன் அக்கால அவகாசம் நிறைவுபெறுகிறது.
அதிவேக நெடுஞ்சாலைகளிலே பயணிக்கின்ற அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் சென்ற வாரம் நான் வவுனியாவிலிருந்து பேரூந்தில் வரும்போது அதிவேக நெடுஞ்சாலையிலே பயணிக்கின்ற பேரூந்தில் சட்டத்திற்கு மாறாக பயணிகளின் உயிரை மதிக்காது நின்றுவரும் பயணிகளை (Standing Passengers) கொண்டுவருகிறார்கள்.
நாங்கள் ஆசனத்திலே இருக்கிறவர்கள் பட்டி அணிய வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதிவேக நெடுஞ்சாலையிலே நின்று பிரயாணம் செய்யும் பயணிகளின் நிலை என்ன? இவ்விடயத்தில் உரிய கவனத்தை கோருகிறேன்.
இந்த நிலைமை மாற வேண்டும் சட்டத்தை மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னுமொரு முக்கிய விடயத்தை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கான சாரதி அனுமதிப் பத்திரம் எவ்வாறு வழங்கப்படுகிறது?
வாகன போக்குவரத்து நடக்காத இடத்தில் இருசக்கர வாகனத்தில் எட்டு போட்டு காட்டினால் அவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது, வீதியில் ஓடிக்காட்ட தேவையில்லை.
எட்டு போட்டு காட்டிவிட்டு வீதிக்கு வருபவர்கள் வீதியில் வாகனம் செலுத்தும் அனுபவமின்மையால் விபத்துகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வீதிகளிலே பயணித்து பயிற்சி பெறுவார்களேயானால் இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கான ஏதுநிலை ஏற்படலாம்.
அவ்வாறே உழவு இயந்திரங்கள் மற்றும் லாண்ட்மாஸ்ரர்களின் பின்புறத்தில் இரவில் ஒளிரும் பட்டிகள் பொருத்தப்படல் கட்டாயமாக்கப்படல் வேண்டும்.
அவ்வாறு செய்வதால் இரவு நேரத்திலே ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்கலாம்.
கெளரவ சபைக்கு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே
ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைப் பேரவையின் 63வது கூட்டத்தொடர் நேற்றுத் ஆரம்பமாகியிருக்கிறது. இக்கூட்டத்தொடர் அடுத்த ஏழாம் திகதி வரை ஜெனீவாவிலே நடைபெறுகிறது.
இலங்கை தொடர்பான முன்னோட்ட அறிக்கையில் இலங்கையில் நிகழ்ந்த மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளது, அந்த அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்.
அந்த அறிக்கையிலே மேற்படிவிடயங்கள் தொடர்பாக அரசாங்கத்தால் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளில் முன்னேற்றமின்மை தொடரும் கெடுபிடிகள் தொடர்பாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்காமைக்கு எங்கள் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல் நடத்துவது போன்ற பல விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் அக்கறையின்றி இருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் விஞ்ஞாபனங்களிலே, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக மேற்படி விடயங்களுக்கு தீர்வு காண்போம் என உத்தரவாதம் கொடுத்திருக்கிறீர்கள்.
ஆகவே, உங்களுடைய தேர்தல் அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டிய பாரிய பொறுப்பு உங்களுக்கிருக்கிறது. அந்த வகையிலே நீங்கள் இந்த விடயங்களிலே கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் கூறிக்கொண்டு, இந்த விடயங்களிலே நீங்கள் கவனம் செலுத்தாமையையிட்டு என்னுடைய அதிருப்தியை இந்தச் சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அதேபோல, நீங்கள் நாளை கொண்டுவருகின்ற ஒரு சட்டமூலம் தொடர்பாகவும் குறிப்பிட விரும்புகிறேன்.
அதாவது “பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமை அதிகாரி சட்டமூலம்” முப்படைகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகக் கொண்டுவரப்பட்டதாகும்.
நாளை பாராளுமன்றத்திலே அதை நீக்குவதற்காக சட்டமூலம் கொண்டு வருகிறீர்கள். அதையும் நாங்கள் வரவேற்கிறோம்.
அந்தச் சட்டம் எங்களுக்குத் தேவை இல்லாத ஒரு சட்டம். ஏன் நீங்கள் அந்தச் சட்டமூலத்தை இல்லாமல் செய்கிறீர்கள் என்பதற்கு உங்களாலே கொடுக்கப்பட்ட விளக்கம் யாதெனில், பாதுகாப்புச் செலவீனங்களைக் குறைத்து எங்களுடைய நாட்டினுடைய ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அந்த நிதியைப் பயன்படுத்துவதற்காக என சொல்லப்படுகிறது.
ஆனால், நிதி மாத்திரம் அல்ல எமது முக்கியமான பிரச்சனை. எங்களுடைய நாட்டினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்தச் சட்டமூலம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீங்கள் கருதுவதாக நான் நினைக்கிறேன்.
அதாவது, எங்களுடைய நாட்டினுடைய பொதுப் பாதுகாப்பு இப்போது சீராக இருக்கிறது என்ற கருதுகோளின் அடிப்படையில்தான் இந்தப் பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமை அதிகாரி என்ற பதவியையும் அந்த அலுவலகத்தையும் நீக்குவதற்கு முன்வந்திருக்கிறீர்கள், மிகவும் நல்ல விடயம்.
அப்படியாக இந்த நாட்டினுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால், நீங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்திலே குறிப்பிட்ட பயங்கரவாதத் தடைச்சட்டதை ஏன் நீக்கமுடியாது? மிகவும் மோசமான மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்வதற்கு உறுதுணையாக இருக்கின்ற இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கல் முக்கியமானதாகும்.
ஆகவே, நீங்கள் இந்தப் பிரதானியை நீக்குவது மாத்திரம் இல்லை. எங்களுடைய நாட்டினுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கருதுகின்ற நீங்கள், தயவுசெய்து இந்த மிகவும் மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்கிறேன்.
அதேவேளை ஊழல் ஒழிப்பு, நிதி துஷ்பிரயோகம் மற்றும் போதைவஸ்த்து பாவனை ஆகியவற்றுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம்.
எமது முன்னோர் கர்மவினை பற்றி பேசுவதை கேட்டிருக்கிறேன்.
பல ஆயிரம் தாய்மார்களின் கண்களில் வந்த கண்நீர் இன்று முக்கியமான ஒரு சிலரின் கண்ணிலே வருவதை காணக்கூடியதாக உள்ளது.
ஆனால் அதைப்பற்றி நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. ஆம் எங்களுக்கு அதிலே சந்தோஷம் இல்லை.
ஆனால், தனக்கு தனக்கென்று ஒரு விடயம் நடக்கும்போது, அவர்களுக்கு மனதில் மனசாட்சி உறுத்தவேண்டும்.
எங்களாலே எத்தனை பேருடைய கண்களிலே கண்ணீர் வந்தது, அந்தக் கர்மா எங்களுக்கும் அந்த துர்ப்பாக்கிய நிலையை தந்திருக்கிறது என மனம்வருந்தி திருந்த வேண்டும்.
ஆகவே, இன்றைய சட்டமூலத்திலே குறிப்பிடப்பட்ட முக்கியமான விடயங்களுக்கு எங்களுடைய ஆதரவு நிச்சயமாக இருக்கும்.
இந்த நாட்டின் பொருளாதாரத்திலே பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்ற வீதி விபத்துகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
எமது மாகாணத்தின் வீதிகளிலே மிகவும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. ஆனால்,
அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை மூன்று விபத்து மற்றும் அவசர சிகிச்சை (Accident and Emergency) வசதிகள்தான் இருக்கின்றன. அதாவது மூன்று விபத்துச் சேவைப் பிரிவுகள் இருக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்திலே மாங்குளத்திலே ஒரு (Rehabilitation Hospital), புனர்வாழ்வு வைத்தியசாலை
அமைக்கப்பட்டிருக்கிறது.
வீதி விபத்துகளிலே காயமடைகின்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், புனர்வாழ்வு அளிப்பதற்கும் முக்கியமான ஒரு நிலையமாக அது இருக்கின்றது.
ஆனால், இன்று அந்த நிலையத்திலே ஆளணி பற்றாக்குறை என்பது மிகவும் மோசமாக இருக்கிறது.
வடக்கு மாகாணத்திலே இருக்கிற ஐந்து பிரதான வைத்தியசாலைகளிலே, வவுனியா வைத்தியசாலையிலும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலும் மட்டும்தான் விபத்துச் சேவைப் பிரிவுகள் இருக்கின்றன.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலே விபத்துச் சேவைப் பிரிவுகள் இல்லை.
ஆகவே, வீதி விபத்துகளால் நாட்டுக்கு ஏற்படுகின்ற பொருளாதார நட்டத்தையும் உயிரிழப்புகளையும் குறைக்க வேண்டும் என்றால், சுகாதாரச் சேவையிலே பாரிய முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது.
நான் கூறிய மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி வைத்தியசாலைகளிலே எதிர்வரும் காலத்திலாவது விபத்துச் சேவைப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும்.
அதேபோல, எங்களுடைய வவுனியா வைத்தியசாலையிலே விபத்துச் சேவைப் பிரிவு இருந்தாலும் கூட இன்று அங்கு ஒரே ஒரு மயக்கவியல் நிபுணர்தான் இருக்கிறார்.
பல்வேறு தரப்பினரும் பாவிக்கும் மிகப்பெரிய வைத்தியசாலையில் ஒரே ஒரு மயக்கவியல் நிபுணர்தான் இருக்கிறார்.
அங்கிருக்கின்ற CT Scan மிகவும் பழமையானது.
ஆகவே, விபத்துகளைக் குறைப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் மேற்கூறிய விடயங்களிலே இந்தச் சபை கவனம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.