நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்குமாறு நாமல் கோரிக்கை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூலக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கடிதம், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாகச் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் அலுவலகப் பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினார்.
மேலும், நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையிலுள்ள மரபுகளுக்கு அமைவாக இது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இது குறித்துக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க, குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், வழக்கமான மரபுகளுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளை (08) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.