அம்பாறையில் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா
தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் நேற்று (01) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் ஆன்ம சாந்திக்காக பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து தேசியக் கொடி மற்றும் பொலிஸ் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், வீரமரணமடைந்த வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்ல பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நினைவுத் தூபிக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அம்பாறை கோட்டத்திற்குட்பட்ட விசேட அதிரடிப்படை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.
இதன்போது உரையாற்றிய பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்ல, தேசத்தையும் மக்களையும் பாதுகாக்கும் பணியில் உயிர்த் தியாகம் செய்த விசேட அதிரடிப்படை வீரர்களின் துணிவு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவை எனத் தெரிவித்தார்.
அத்துடன், வீரர்களின் தியாகங்களை ஒருபோதும் மறவாது போற்றுவதுடன், அவர்களின் குடும்பங்களின் நலன்களைப் பேணுவதும் பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.

