உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புனர்வாழ்வு நிறுவனங்களை ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி அறிவுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
50 பார்வைகள்

பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தினார்.

போதைப்பொருள் பேரழிவை முற்றாக ஒழிக்க அரசாங்கம் ஆரம்பித்துள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டிற்கு அனைத்து தரப்பினரின் தீவிர பங்களிப்பையும் வழங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புனர்வாழ்வு நிலையங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் அனைத்து புனர்வாழ்வு நிறுவனங்களையும் உடனடியாக ஒரு ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தின்கீழ் கொண்டு வருவதற்குமான அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடலில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை, அபயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை, புனர்வாழ்வு பணியகம், தேசிய பொலிஸ் பயிற்சிகளுக்கான நிறுவனம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரிவு ஆகியவற்றினால் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்காக அரசாங்கம் ஆரம்பித்த ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டிற்கு மூலதனச் செலவினமாக ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

அதன்படி, 417.48 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் இலங்கை பொலிஸின் போதைப்பொருள் பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களைக் கண்டறியும் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கும் தேவையான வசதிகளை வழங்கும் திட்டம், 13.54 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் கல்லடி பொலிஸ் பயிற்சி மையத்தை புனர்வாழ்வு மையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் 288.15 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் அபயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு தேவையான வசதிகளை வழங்கும் திட்டத்தின் இதுவரை கிடைத்த முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

புனர்வாழ்வு பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் திட்டம், அதேபோன்று விசேட அதிரடிப்படையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் கடத்தல் பற்றிய புலனாய்வுத் தகவல்களைச் சேகரித்தல் மற்றும் சோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நாடு முழுவதிலும் உள்ள 608 பொலிஸ் நிலையங்களில் வாடகை அடிப்படையில் இயங்கி வரும் பொலிஸ் நிலையங்கள் மற்றும் ஏனைய கட்டிடங்களுக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் பெருமளவு பணத்தை செலவிடுகிறது. அந்த செலவைக் குறைப்பதற்காக பொலிஸிற்கு நிரந்தரக் கட்டிடங்களை நிர்மாணிப்பதன் அவசியமும் இங்கு விவாதிக்கப்பட்டது.

இலங்கை பொலிஸில் தற்போதுள்ள வாகனங்களில் கணிசமான பகுதி 20 ஆண்டுகளுக்கும் மேலானவை என்பதால், பராமரிப்புச் செலவைக் குறைக்கும் வகையில் புதிய வாகனங்களை கொள்முதல் செய்வது குறித்தும் ஆராயப்பட்டது.

உத்தேச பொலிஸ் தலைமையகக் கட்டிட நிர்மாணம், பொலிஸ் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொலிஸ் நலன்புரிப் பிரிவின் ஒதுக்கீட்டின் கீழ் முன்மொழியப்பட்ட மிரிஹான பொலிஸ் விளையாட்டு வளாகத்தின் நிர்மாணம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் வெலிகம மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்களின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் சில மாதங்களில் பூர்த்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

இலங்கை பொலிஸ் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம், சீருடைகளை புதுப்பித்தல், பொலிஸ் அதிகாரிகளின் அதிக பணிச்சுமையால் ஏற்பட்டுள்ள ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பொலிஸ் அதிகாரிகளிடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனம் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனம் திரும்பியது.

பாடசாலைகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும் விழிப்புணர்வுத் திட்டங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டதுடன், அப்பணிகளுக்காக ஆலோசகர்களின் குழுவொன்றை உருவாக்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சுயமாக புனர்வாழ்வு பெற முன்வருபவர்களுக்காக, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் 3 மாத குடும்ப ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இத்திட்டத்தின் வெற்றி காரணமாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சுயமாக புனர்வாழ்வு பெற முன்வரும் போக்கு கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

51 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

51 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

59 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

56 0 0