யாழில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய ரீதியிலான மொடலிங் போட்டி.!
நாட்டின் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களை ஊக்குவித்து, மொடலிங் துறையில் புதிய முகங்களை அடையாளப்படுத்தும் நோக்கில் ‘Sri Lankan Upcoming Model 2026’ மாபெரும் மொடலிங் அழகன் மற்றும் அழகித் தெரிவுப் போட்டி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் ஏற்பாட்டாளரான ஹரன் ரம்மின்சன் தலைமையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்நிகழ்வு கோலாகலமாக இடம்பெற்றது.
போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த 9 அழகிகளும் 10 அழகன்களும் மொடலிங் உடைகள் மற்றும் பாரம்பரிய ஆடைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி போட்டியிட்டனர்.
அவர்களின் மேடை நடையும், தன்னம்பிக்கையும், ஆடை அலங்காரங்களும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.
இந்நிகழ்வில் உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் டொக்டர் எஸ். எம். ராஷ்மி ரூமி, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் விஜய் ஆனந்த், டொக்டர் ஏ. ஆர். நிஷா, உலகத் தமிழ் கலை மற்றும் கலாச்சார அக்கடமியின் அகில இந்திய சட்ட ஆலோசகர் டாக்டர் செண்பகம் (ராஜா), உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் இலங்கை பிரதித் தலைவரும் சமாதான தூதுவருமான தொழிலதிபர் ஷேக் அமானி, ஷர்மிளா செயினுலாப்தீன், ரஞ்சனி சுரேஷ், Tube தமிழ் இலங்கை பணிப்பாளர் தமிழ்க்கொடி திவைனியா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு போட்டியாளர்களை ஊக்குவித்தனர்.
போட்டியின் இறுதிக்கட்டத்திற்கு இரு பிரிவுகளிலும் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பின்னர் நடுவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் சிறந்த ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, Stylo Rami Model Academy – Sri Lankan Upcoming Model 2026 பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இளம் திறமையாளர்களை தேசிய மட்டத்திற்கு அறிமுகப்படுத்துவதற்கான சிறந்த மேடையாக இந்நிகழ்வு அமைந்ததுடன், யாழ்ப்பாணத்தில் மொடலிங் துறையின் வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கிய நிகழ்வாகவும் அமைந்தது.
மாணவிகளது கலை கலாச்சார நிகழ்வுகள் இதன்போது மேடை ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








