விரைவில் மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கம்
வரும் வாரங்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்றும், இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை சேவையை விரிவுபடுத்தும் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் பல நாடுகளில் இருந்து மொத்தம் 121 மெட்ரோ பேருந்துகள் தற்போது பெறப்பட்டு, சேவையில் ஈடுபடுத்துவதற்கு முன்பு பதிவு மற்றும் பிற சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
“தேவையான சட்ட மற்றும் பதிவு நடைமுறைகளை நிறைவுசெய்த பின்னர், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்தப் பேருந்துகளைப் பொதுப் பயன்பாட்டிற்காகப் கொண்டுவருவோம் என எதிர்பார்க்கிறோம்,” என்று ரத்நாயக்க கூறியுள்ளார்.
மெட்ரோ பேருந்து நிறுவனம் ஏற்கனவே பல புதிய வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவை வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜப்பானிலிருந்து கூடுதலாக 50 பேருந்துகள் வரவிருப்பதாகவும், இது கொழும்பைத் தாண்டி மெட்ரோ சேவைகளை விரிவுபடுத்த வழிவகுக்கும் என்றும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் மற்றும் கண்டியிலும் மெட்ரோ பேருந்து சேவைகளைத் தொடங்க நாங்கள் நம்புகிறோம். அதற்காக, இரு மாவட்டங்களிலும் மெட்ரோ பணிமனைகள் நிறுவப்பட வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
அமைச்சரின் கூற்றுப்படி, அதிகமான பயணிகளைத் தனியார் வாகனங்களிலிருந்து பொதுப் போக்குவரத்திற்கு மாற ஊக்குவிப்பதன் மூலம், போக்குவரத்து நெரிசல், எரிபொருள் நுகர்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றைக் குறைப்பதே அரசாங்கத்தின் நீண்டகால நோக்கமாகும்.
எதிர்கால மெட்ரோ பேருந்துகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயணிகளுக்கான தகவல்கள் இடம்பெறும் என்றும், 2030-ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கையை 500-க்கும் மேலாக விரிவுபடுத்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.