பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் பாலம் திறந்து வைப்பு.!
கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
40மீற்றர் நீளமான குறித்த பாலம் திறந்து வைக்கப்பட்டு 06 வருடங்களின் பின்னர் மக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கடந்த ஆட்சியாளர்களினால் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா பெருந்தொற்று காரணமாகவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இடை நடுவே கைவிடப்பட்ட நிலையில் இருந்த குறித்த பாலமானது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கையின் மூலம் 206மில்லியன் ரூபா செலவில் குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தது.
இன்று 28.07.2026 வீதிகள் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களினால் உத்தியோபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் மருங்கன் மோகன், கண்டாவளை பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த பாலத்தின் அபிவிருத்தி நடவடிக்கையின் போது பல்வேறு இன்னல்களும் இரண்டு உயிர்கள் பறி போனதுடன் பலர் வீதி விபத்துகளையும் சந்தித்து வந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் குறித்த காலத்தில் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


