ஜனாதிபதிக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருவது மிகவும் அவசியம்!
அரசமைப்புத் திருத்தம் ஊடாகத் தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு எடுக்கும் முயற்சி, நிறைவேற்றுத்துறையால் நீதித்துறையினருக்கு வழங்கப்படும் ‘இலஞ்சம்’ அல்லது ‘பரிசு’ போன்றதே என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசு புதிய அரசமைப்பை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்து இரண்டு ஆண்டுகள் கடந்தும், அதற்கான ஆரம்பக்கட்டப் பேச்சுகளைக்கூட முன்னெடுக்கவில்லை. தங்களுக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காகவே நீதித்துறையினரின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு முற்படுகின்றது.
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்க வேண்டுமாயின், அது புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் ஊடாகவே அமைய வேண்டும். மாறாக, தற்போது பணியிலுள்ளவர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது முறையற்றது. இந்த முயற்சிக்கு எதிராக நீதிமன்ற சமூகம் மற்றும் நீதிபதிகள் சங்கங்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது.
நீதித்துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிகளுக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும். உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்பாமல் நீதித்துறையை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணை கொண்டு வருவது அத்தியாவசியமானது.” – என்றார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் தார்மீகப் பொறுப்பேற்பதாகக் கூறும் நீதி அமைச்சர், தனது பதவியை இராஜிநாமா செய்து சுயாதீன விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுப்பது சிறந்தது என்றும் பிரேம்நாத் சி. தொலவத்த மேலும் கூறினார்.