பிலிப்பைன்ஸில் மண்சரிவு; பலர் உயிரிழப்பு.!
பிலிப்பைன்ஸ் பிராந்தியத்தில் ‘பாவி’ சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவுகளில் சிக்கி 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸில் ‘இண்டே’ (Inday) என அழைக்கப்படும் இந்தச் சூறாவளி கடந்த புதன்கிழமை நாட்டின் எல்லைக்குள் நுழைந்தது. இது பிலிப்பைன்ஸ் கடற்பரப்பினூடாக வடக்கு லுசோனை நோக்கி நகர்கையில் சற்று பலவீனமடைந்துள்ளது.
மின்டனாவோ தீவின் தெற்கு சரங்கனி மாகாணத்தில் உள்ள மாலபடன் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் சிலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டு மாலபடன் நகர மேயர் சால்வே சும்போ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் தெற்கு மாகாணமான லானாவ் டெல் சுர் பகுதியில் ஏற்பட்ட மற்றொரு மண்சரிவில் சிக்கி குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை, அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய தீவுகளான குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகளை இந்த அதிதீவிர சூறாவளி தாக்கியது.
அங்கு உட்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்ட போதிலும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
சனிக்கிழமை (11) தைவானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், ஜப்பானின் சில பகுதிகளிலும் இந்தச் சூறாவளி கனமழையைக் கொட்டித் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தைவானில் புயல் பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் ஏற்கனவே வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் இது சீனாவில் தரைதட்டக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.