நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு – ஒரே நாளில் 640 பேர் கைது!
பொலிஸ்மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்புச் சோதனை நடவடிக்கைகளில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 30 முக்கிய சந்தேகநபர்கள் உட்பட 640 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, நாடு முழுவதும் 27 ஆயிரத்து 217 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 30 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் பின்வருமாறு:-
* குற்றச்செயல்களுடன் தொடர்புடையோர் – 640 நபர்கள்.
* பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் – 88 சந்தேகநபர்கள்.
* நாள் குறிப்பிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் – 228 சந்தேகநபர்கள்.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 சாரதிகளுக்கு எதிராகவும், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய 133 சாரதிகளுக்கு எதிராகவும், ஏனைய போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4 ஆயிரத்து 51 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் வலய மட்டத்திலான இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.