உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீர்கொழும்பு சிறைக்கலவரம் தொடர்பில் நீதியமைச்சர் நாடாளுமன்றில் விளக்கம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
34 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர வன்முறைச் சம்பவமானது, சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய இரு எதிர்த்தரப்புக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலினால் தூண்டப்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் இன்று வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், இது தொடர்பான விரிவான விசாரணைகள் இன்னும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், இறுதி முடிவுகள் எதற்கும் இன்னும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீத்து அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த ஜூலை 5ஆம் திகதி இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட ஆரம்பகட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்தமையுடன் மேலும் 35 பேர் காயமடைந்தனர்.

அன்றைய தினம் மாலையே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும், மறுநாள் காலை கைதிகள் காலை உணவை உட்கொண்ட பின்னர், நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் மீண்டும் பாரிய வன்முறை வெடித்தது.

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் மற்றும் ஏனைய தடைசெய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக, அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கிய கைதிகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறான தகவல் வழங்குநர்கள் பொதுவாகக் குற்றக் கும்பல்களினால் இலக்கு வைக்கப்படுகின்றார்கள். இந்த வன்முறைக்குப் பின்னாலுள்ள சாத்தியமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

எனினும், இவை தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலான முதற்கட்டக் கண்டுபிடிப்புகள் மட்டுமேயாகும். இது தொடர்பான இறுதி முடிவுகள், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.

வன்முறையின் போது ஒரு சிறிய ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினர், சிறைச்சாலையிலிருந்த சிசிரிவி கமராக்கள் மற்றும் உடல் சோதனைக் கருவிகளைத் திட்டமிட்டு நாசம் செய்துள்ளனர்.

சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருள்கள் நுழைவதைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்புகளை முடக்கும் நோக்கிலேயே அவர்கள் இதனைச் செய்துள்ளனர்.

இந்த வன்முறையில் அனைத்துக் கைதிகளும் ஈடுபடவில்லை. காயமடைந்தவர்களில் பலர் அப்பாவி கைதிகள்.

மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற ஆயுதங்களற்ற சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் இந்தக் கும்பல் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது.

தங்களது சக அதிகாரிகளைப் பாதுகாக்க முயன்ற போதே பல அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர், சிறையின் இரும்பு வாயிலை உடைத்துக் கொண்டு கைதிகள் மற்றொரு வெளியேறும் வழியை நோக்கி முன்னேறியுள்ளனர்.

ஒருவேளை அவர்கள் சிறையிலிருந்து தப்பியிருந்தால், அது பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைந்திருக்கும்.

இதேவேளை, இந்த வன்முறையின் போது சில கைதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்தும் தற்போது தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0