நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று திங்கட்கிழமை (6) மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட மேலும் இரண்டு கைதிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் தகவல்படி, இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகள் குழுவொன்றிற்கும் இடையே இந்த கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 50 பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படை வான் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதுடன் நிலைமையைத் தளர்த்துவதற்காக நீர்கொழும்பு பொலிஸாருக்கு மேலதிகமாக மீரிகம, வெயாங்கொட உள்ளிட்ட சுற்றியுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும் அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சிறைச்சாலையின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை கைதிகளிடையே ஏற்பட்ட முதற்கட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்ததுடன், 34 பேர் காயமடைந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை ஏற்பட்ட வன்முறையில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது.










