நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி, உயர் நீதிமன்றத்தால் ‘பொருளாதாரக் கொலையாளிகள்’ என முத்திரை குத்தப்பட்டவர்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றனர் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையாகச் சாடியுள்ளார். இவ்வாறான ஊழல்வாதிகளின் எந்தவொரு அரசியல் மிரட்டல்களுக்கும் தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும் பணியாது என்றும் ஊடகங்களிடம் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
‘மக்கள் கோரினால் நாமலைக் களமிறக்குவோம்’ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டியில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்த கருத்தைக் கேலி செய்துள்ள அவர், இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த குடும்ப அரசியல் மற்றும் வாரிசு அரசியலை நாட்டு மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர் என்றும், மீண்டும் அதே பழைய முகங்களை ஆட்சிப் பீடத்தில் அமர்த்த மக்கள் ஒருபோதும் ஆணை வழங்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது கடந்த கால ஊழல்களையும், தவறுகளையும் மூடிமறைத்து சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இப்போது ஒன்றியணைய நாடகமாடுகின்றன. ஆனால், மக்கள் மத்தியில் இவர்களின் போலிப் பிரச்சாரங்கள் இனிமேல் எடுபடாது” என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.









