உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எரிபொருள் விநியோக சிக்கலைத் தீர்க்க அரசால் ஐந்து விசேட அதிகாரிகள் நியமனம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
42 பார்வைகள்

அனைத்து அமைச்சுகளையும் உள்ளடக்கும் வகையில், எரிபொருள் விநியோக சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஐந்து விசேட அதிகாரிகளை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் கூட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களிலும் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சிக்கல்களைக் கண்டறிந்து, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒருங்கிணைந்து அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதே இந்த ஐந்து அதிகாரிகளினதும் பிரதான பொறுப்பாகும்.

கைத்தொழிலாளர்கள் தமது உற்பத்திகளை நாடெங்கும் விநியோகிப்பதற்குத் தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த ஒதுக்கீட்டை அதிகரிக்காவிட்டால், போக்குவரத்துச் செலவு உயர்ந்து பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும். இது எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தும் என்பதால், இது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

தொழிற்சாலைகள், சதொச உள்ளிட்ட அத்தியாவசிய உணவு விநியோக நிறுவனங்கள், சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய சேவை வழங்கும் நிறுவனங்களின் எரிபொருள் கோரிக்கைகளைச் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் ஊடாக வலுசக்தி அமைச்சிடம் சமர்ப்பித்து, விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

விவசாயம் மற்றும் கடற்றொழில் துறையினருக்கு அரச அதிகாரிகளின் பரிந்துரைக் கடிதங்களுக்குப் பதிலாக, கியூ.ஆர். குறியீட்டு முறையைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்குவதையும், விலையேற்றத்தைத் தவிர்ப்பதையும் இலக்காகக் கொண்டு, முறையான எரிபொருள் முகாமைத்துவத்தை பேணுமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

55 0 0
இலங்கை செய்திகள்

சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!

கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.…

44 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

42 0 0