மன்னாரில் காற்றாலை மின்சாரக் கம்பிகளில் சிக்கி பிளமிங்கோ பறவைகள் உயிரிழப்பு.!
மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள அரிய வகை வெளிநாட்டுப் பறவையான பிளமிங்கோ (Flamingo), அதிவலு கொண்ட காற்றாலை மின்சாரக் கம்பிகளில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தில் இரண்டு பறவைகள் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு பறவை பலத்த காயமடைந்துள்ளது.
தற்போது மன்னார் தீவுப் பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வருகை தரும் பருவகாலமாகும். இந்நிலையில், அங்குள்ள காற்றாலை மின்சார விநியோகக் கம்பிகளில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளன.விபத்துக்குள்ளான பறவைகளை மீட்டபோது, அவற்றில் இரண்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டன.
காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மற்றுமொரு பறவை, மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப் பறவைக்கு மருத்துவ சிகிச்சையளிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரிய வகை பிளமிங்கோ பறவைகளைக் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இந்தப் பறவைகளைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்புப் பணிகளை வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் என்பன முன்னெடுத்து வருகின்ற போதிலும், இவ்வாறான விபத்துக்கள் இயற்கை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.