போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரம் – அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.!
அச்சுவேலி பகுதியில் போதைப் பாவனைகளுடன் தொடர்புடைய நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் ஹீங்கந்த தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொறுப்பதிகாரி பிரியந்த இடமாற்றம் பெற்று கண்டிக்கு சென்ற நிலையில் புதிய பொறுப்பதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அவர் பொலிஸ் நிலையத்தின் நிலைமைகள் தொடர்பிலும் பொது மக்களுக்ககான அறிவுறுத்தல்கள் தொடர்பில் அவர் ஊடகர்களை பொலிஸ் நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் போதைப் பொருள் முற்றுகைகள் சுற்றி வளைப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. குற்றத்தடுப்பு பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் அர்ஜுனவின் தலைமையில் இந்த சுற்றிவளைப்புகள் ஒவ்வொரு மாலை நேரத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்சமயம் பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான தொடர்பு தற்போது குறைவடைந்துள்ளது.
அவற்றை மீளவும் கட்டி எழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் ஒவ்வொரு தலைவர் என்ற வகையில் பிரஜா பொலிஸ் அமைப்பை ஸ்தாபித்து அவற்றின் ஊடாக குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிக விரைவில் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் இவற்றை நிறுவுவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் 43 பாரதூரமான குற்றச்சம்பவங்கள் பதிவாகி இருந்த நிலையில் அவற்றினை பொலிஸ் உத்தியோகத்தர்கள் வினைத்திறனாக செயல்பட்டு அவற்றுக்கான தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளனர். குற்றச் செயல்களுடன் ஈடுபட்ட நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வருடம் போதை மாத்திரைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறான நபர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சிறு இளைஞர்கள் மத்தியில் போதை கொருட்களின் பாவனை அதிகரித்த நிலையில் தற்பொழுது அந்த பிரதேசத்தில் அவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. வியாபாரத்தில் ஈடுபட்ட நபர்களும் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரம் இல்லை என்று சொன்னாலும் சில இளைஞர்கள் அவற்றை பாவித்து வந்தவை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் மூலம் புணர்வாழ்வு வழங்கப்பட்டு அவர்கள் தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலர் புணர்வாழ்வு முடிந்து வெளியில் வந்து தற்பொழுது சமூகத்துடன் இணைக்கப்பட்டு நட்பிரஜைகளாக வாழ்வதையும் காணக் கூடியதாக உள்ளதாக பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.
எனவே பொதுமக்கள் உங்கள் பிரதேசத்தில் இடம் பெறும் குற்ற செயல்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் தொடர்பில் தகவல்களை பொலிஸ் நிலைய தொலைபேசி இயக்கத்திற்கு 0212058585 அல்லது பொறுப்பதிகாரியின் தொலைபேசி 0718591320 இலக்கத்திற்கு வழங்கும் பட்சத்தில் அவற்றை நாங்கள் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பின்னிற்க மாட்டோம் என அவர் கூறினார்.
மேலும் சமூகத்தில் குற்றச்சாட்டுகளை கட்டுப்படுத்துவதற்கும் குற்றவாளிகளை இனம் காண்பதற்கும் ஊடகவியலாளர்களின் வகிபங்கு மிக முக்கியமானதாகவும் அவர் குறிப்பிட்டார். குற்றச் சந்தேக நபர்கள் தொடர்பிலும் தெரியப்படுத்துபவர்களின் உண்மைத் தன்மை பாதுகாக்கப்பட்டு குற்றச்செயலுடன் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.