எரிசக்தி பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை: ஜனாதிபதி பணிப்புரை.!
நாட்டில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எரிசக்தி பயன்பாட்டை முறையாக நிர்வகிப்பதற்கான அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு வழங்கி, எரிசக்தி பாதுகாப்பைப் பேண தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது, எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த நிலையில் அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் தொடர்ச்சியான எரிசக்தி விநியோகத்தைப் பேணுவதில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், எரிசக்தியை சீர்மையான முறையில் பயன்படுத்துவது மூலம் நாடு எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கஅரசு மட்டுமன்றி தனிநபர் மட்டத்திலும் அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், அண்மைக் காலங்களில் அரசாங்கம் எடுத்துள்ள எரிசக்தி மேலாண்மை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பொதுச் சேவைகளுக்கான வழிகாட்டுதல்களையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
எரிசக்தி நுகர்வை திறம்பட கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்துரையாடுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.