இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை அதிகரிக்காதிருக்க தீர்மானம்!
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கமாட்டோம் என பால்மா இறக்குமதியாளர்களும் கோதுமை மா நிறுவனங்களும் இன்று (23) அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் உறுதியளித்துள்ளன.
தற்போதைய போர்ச் சூழ்நிலையால் விநியோக வலையமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் தடையற்ற விநியோகத்தைப் பேணுதல் குறித்து கலந்துரையாடுவதற்காக, பால்மா இறக்குமதியாளர்களும் கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களும் வர்த்தக அமைச்சிற்கு அழைக்கப்பட்டிருந்தன.
இதன்போது, எரிபொருள் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டொலர் மதிப்பு அதிகரிப்பு ஆகியவை உற்பத்திச் செலவில் தாக்கம் ஏற்படுத்தியிருந்தாலும், இக்கட்டான சூழலில் அரசாங்கத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதே தமது நோக்கம் என நிறுவனங்கள் தெரிவித்தன.
மேலும், எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தேவையான பால்மா மற்றும் கோதுமை மா கையிருப்பு இருப்பதாகவும், சித்திரை புத்தாண்டு காலம் முடியும் வரை விலை உயர்வு மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் அவை உறுதிப்படுத்தின.இதேவேளை, எரிபொருள் ஒதுக்கீட்டு முறையால் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து நிறுவனங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தன.
இதற்கு பதிலளித்த அமைச்சர், உணவு விநியோகத்தில் ஈடுபடும் போக்குவரத்து சேவையாளர்கள் விசேட தரவு சேகரிப்பு திட்டத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினார்.அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சு அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.