யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சிசுவின் கருச் சிதைவு!
யாழ்ப்பாணம் நகர மையப்பகுதியில் கருவொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ். நீதவான் லெனின் குமார் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் பின்புறப் பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய பெண் ஒருவர் பின்னர் அங்கிருந்து காணாமல் போயுள்ளார்.
அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் ஆறு முதல் ஏழு மாத வயதுடைய கரு வீதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த தகவலை அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் கருவை கடிதப்பெட்டியால் மூடி விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண், சட்டவிரோத கருக்கலைப்பு செய்த பின்னர் கருவை வீதியில் வீசிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட நீதவான், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன், மீட்கப்பட்ட கருவை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கவும் பணித்துள்ளார்.