ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூடு வழக்கு: பெண் உட்பட இருவர் போதைப்பொருளுடன் கைது.!
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இந்தக் கைது இடம்பெற்றது.
சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் கடவத்தை – சூரியபாலுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், வெஹெரகொடெல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவர் வெல்லம்பிட்டிய – வெஹெரகொடெல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்ப விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை ஆயுதத்துடன் தனது ஓட்டோவில் அழைத்துச் சென்ற சாரதியாக செயற்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. பெண் சந்தேகநபர் அவருக்கு உதவியாகஇருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது ஆண் சந்தேகநபரிடமிருந்து 6 கிராம் 540 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், பெண் சந்தேகநபரிடமிருந்து 3 கிராம் 100 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இருவரையும் 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.