சுரேஷ் சலே 90 நாட்கள் தடுப்புக் காவலில் – பாதுகாப்பு அமைச்சு அனுமதி.!
அரசுப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேவை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முக்கிய முன்னேற்றமாக, அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 25 ஆம் திகதி பேலியகொட பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பிரித்தானிய ‘சானல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில், ஈஸ்டர் தாக்குதலுக்கும் சுரேஷ் சலேவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சமூக மற்றும் சமய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வணக்கத்துக்குரிய ரொஹான் டி சில்வா அடிகளார் அளித்த முறைப்பாட்டின் பேரிலேயே விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற காலத்தில் சுரேஷ் சலே மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றி வந்தார்.
பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அவர் அரசுப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், அவர் ஓய்வுபெற்றார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த 90 நாள் தடுப்புக் காவல் விசாரணையின் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.