பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என அச்சம் பரப்ப சிலர் முயற்சி செய்கின்றனர் – ஜனாதிபதி தெரிவிப்பு.!
ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என கூறி முதலீட்டாளர்களை அச்சப்படுத்த சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டிலும் பல்வேறு மாதங்களை குறிப்பிடப்பட்டபோதிலும், பொருளாதாரம் நிலைத்தன்மையை எட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அநுராதபுரம், கொரகஹவெவவில் உள்ள வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (27) பிற்பகல் நடைபெற்ற ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசிய திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.தற்போது நாட்டின் பொருளாதாரப் பயணம் சீராக முன்னேறி வருவதாகவும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொருளாதாரத்தில் நம்பிக்கை இல்லாத நாட்டில் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாதாரண மக்களுக்கு பொருளாதார நன்மைகள் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இவ்வருடம் 31,000 வீடுகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
டிட்வா சூறாவளி காரணமாக மேலும் 20,000 வீடுகள் தேவையாகியுள்ளன. 6,000 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், சுமார் 15,000 வீடுகள் மீள்குடியேற்றத்திற்குத் தகுதியற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்தம் 51,000 வீடுகள் நிர்மாணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், மாகாண சபைகளுக்கு 15,000 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கிராமிய வீதிகள் அவ்வளவில் அபிவிருத்தி செய்யப்படும். கிராமிய வீதிகளை மேம்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.